கோவிட்19 உள்ளிட்ட வைரஸ்களை அழிக்கும் முககவசத்தை நீண்ட ஆராய்ச்சியின் பின்னர் பேராதனை பல்கலைக்கழக வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த முககவசம் தொடர்பிலான ஆராய்ச்சியை முன்னின்று நடத்திய பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை மூத்த பேராசிரியர் காமினி ராஜபக்ச பாராளுமன்றத்தில் இதனை பிரதமருக்கு வழங்கி அறிமுகம் செய்துவைத்தார்.
மூன்று அடுக்குகளை (layers) கொண்ட இந்த முக கவசம் உலகில் மிகவும் சிறப்பு வாய்ந்த முககவசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த முக கவசத்தில் உள்ள மூன்று அடுக்குகளில் முதல் அடுக்கு உமிழ்நீர் போன்ற திரவங்களை உடனடியாக அகற்றும் வகையில் செயற்படுகிறது.
இரண்டாவது அடுக்கில் உள்ள ஒரு விசேட இரசாயன பதார்த்தம் வைரஸ்களை அழிக்கும்.
மூன்றாவது அடுக்கு உமிழ்நீர் துளிகளை ஆவியாக்குவதற்கான நுட்பத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என இதனை வடிவமைத்தபேராசிரியர் காமினி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த முக கவசத்தை தொடர்ச்சியாக 25 தடவைகள் மீண்டும் கழுவி பயன்படுத்தலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது பயன்படுத்தப்படும் கே.என். 95 முக கவசங்களை விட இந்த முககவசம் மிகவும் பாதுகாப்பானது என்பதை தமது ஆய்வுகள் வெளிப்படுத்துவதாக ஆராய்ச்சி குழுவில் ஒருவரான டாக்டர் சமிந்த ஹேரத், தெரிவித்தார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடம் மற்றும் மருத்துவ பீடம் ஆகியன நடத்திய ஆய்வில் இந்த முககவசம் 99% வைரஸ்களை அழிப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஒரு சாதாரண முககவசத்தில் வைரஸ் சுமார் 7 நாட்கள் உயிர்வாழும். ஆனால் பேராதனைப் பல்கலைக்கழக நிபுணர்கள் வடிவமைத்துள்ள இந்த முககவசம் வைரஸ்களை மிகக் குறுகிய காலத்தில் அழிக்கக்கூடும் என்பது இதன் குறிப்பிடத்தக்க மற்றொரு சிறப்பம்சமாகும்.
இந்த முககவசம் விரைவில் உள்நாட்டு சந்தைகளில் விற்பனைக்கு வரவுள்ளது. அத்துடன், வர்த்தகத்துறை அமைச்சின் உதவியுடன் எதிர்காலத்தில் இவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முக கவச அறிமுக நிகழ்வில் பேசிய வர்த்தகத்துறை அமைச்சர் டாக்டர் பந்துல குணவர்தன, இதுபோன்ற மேம்பட்ட தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவது எமது நாட்டுக்கு பெருமை அளிக்கும் விடயம் எனத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இந்த முககவச அறிமுக நிகழ்வில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.